Saturday, April 26, 2014

பாளையங்கோட்டை தூய சவேரியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டம்.



அகரம் கற்றுத்தந்த தொடக்கப் பள்ளிக்குச் சமீபத்தில் சென்று வந்தீர்களா?

முப்பதெட்டு ஆண்டுகளுக்கு முன் நான் படித்த பாளையங்கோட்டை தூய சவேரியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டம்..

எப்படியோ முகவரி கண்டுபிடித்து எங்களுக்குப் பாடம் சொல்லித்தந்த ராஜம் மிஸ் தொடர்பு கொண்டார்கள்..மனம்  முப்பதெட்டு ஆண்டுகளுக்கு முன் இறக்கை கட்டிப்பறந்தது. பாளையங்கோட்டை மிலிட்டரிலைன் அருகில் வாட்டர்டாங் கடந்து நடந்தால் தெற்குக்கடைவீதி வரும்.நடுவில் வானுயர்ந்த சவேரியார் சர்ச்..ஏசுநாதர் சிலையை நான் முதன்முதலாகப் பார்த்தது அங்கேதான்.

ஆறுஅடுக்கு உயரகோபுரத்தின் மீது மிகப்பெரிய ஆலயமணி இன்றும்உண்டு பூஜை நேரத்தில் ஒல்லியாய் ஜிப்பா அணிந்த மனிதர் அதன் நடுவில் உள்ள கயிற்றினைப் பிடித்துத் தொங்குவார்.மணியின் நடுவில் உள்ள நா வெண்கல மணியில் டாணென்று அடிக்கும்போது சத்தம் காதைப்பிளக்கும்,அப்போது அந்த தேவாலயத்தில் இருக்கும் புறாக்கள் படாரென்று ரெக்கையை விரித்துப் பறப்பதைக் காணக்காத்துக் கிடப்போம்.

யாரேனும் இறந்து அடக்கபூசைகுக் கொண்டுவரும்போது மணி விட்டு விட்டு ஒலிக்கும்.1978 ஆம் ஆண்டு நான் யூ.கே.ஜி.மாணவனாக அந்தப்பள்ளியில் சேர்ந்தேன்..

முட்டை ஓட்டுக்குள் ஒடுங்கிக் கிடந்த குஞ்சுப் பறவை திடீரென்று விட்டுவிடுதலையாகி விரிவானில் பறந்த நிலையாகவே அமைந்தது.காதில் தங்கவளையத்தோடு குட்டிக்குட்டிக் குழந்தைகளான எங்கள் வகுப்புத் தோழர்களை மடியில் அமர்த்தி எழுதச் சொல்லிக்கொடுத்த எங்கள் மரகதம்மிஸ் எனும் அன்பாளரைக் கண்டதும் அந்தப் பள்ளியில்தான்.அந்த அன்பையும் பரிவையும் இன்றுவரை என் மாணவர்களிடம் காட்டிவருவதன் காரணமும் அவர்கள்தான்.
 தூய சவேரியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டம்.பள்ளிக்குள் நுழைகிறேன்.

அதே போல் எந்த முகப்பூச்சும் அற்று இயல்பாய் இருந்தது பள்ளி.பலகைகளால் மறைக்கப்பட்ட வகுப்பறைகள் குட்டிகுட்டியாய் நீள்இருக்கைப்பலகைகள்.அழகான தமிழ் எழுத்துகள்..இலட்சரூபாய் செலவளித்தாலும் எந்த ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களாலும் பதிலீடு செய்யப்பட முடியா அழகியல் சித்திரமாய் என் அன்புப் பள்ளியின் கவின்மிகு வகுப்பறை அமைந்தது.

அதே போன்றதொரு சின்னக்குழந்தையான என் மகனோடு அன்று அந்த வகுப்பறையில் இருந்தேன் என்பது நெகிழ்வான நிகழ்வாய் அமைந்தது.இன்பமும் பதற்றமும் கலந்த புதுஅனுபவம் அது.ஒரு மாதத்திற்குமுன் முகநூல் நண்பர் திரு.செல்வராஜ் அவர்களின் அன்பு அழைப்பில் திருநெல்வேலி,தச்சநல்லூரில் உள்ள வேதிக் வித்யாச்ரம் பள்ளி ஆண்டிறுதிவிழாவில் பேசியபோதுகூட இயல்பாகத்தான் பேசினேன்.

முப்பதெட்டு ஆண்டுகளுக்குப் பின் அந்தப்பள்ளி என்னைப் பாதிக்கிறது என்றால் காரணம் அன்று கல்வி இயல்பாய் மிதமாய் அன்பாய் அழகாய் போதிக்கப்பட்டது.

இன்று நெருக்கடியும் பெற்றோரின் அளவுக்கதிகமான அழுத்தமும் பொருளாதாரத்தோடு தொடர்புபடுத்தப்பட்ட வணிகமயமும் மாணவர் ஆசிரியர் உறவை எதிர்நிலையில் கொண்டுசென்றுவிட்டதாகவே நினைக்க வேண்டியுள்ளது.
சேவியர் பள்ளியில் இடம் கிடைத்துவிட்டால் வாழ்வின் உயர்தரத்தில் முன்னேறிவிடலாம் என்ற எண்ணத்தில் இத்தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்புவரை பயின்று அதன்பின் அதே வளாகத்தில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் இரண்டாண்டுகள் பயின்று அதன்பின் நுழைவுத்தேர்வு எழுதி தூய சவேரியார் பள்ளிக்குப் படிக்கச் சென்ற ஆயிரமாயிரம் மாணவர்கள் திருநெல்வேலில் உண்டு..

தமிழகத்தின் பல பகுதிகளில் கல்விபற்றிய  விழிப்புணர்வு இல்லாத ஆங்கிலேயர் ஆட்சி செய்துகொண்டிருந்த அந்த முன்னைப்பழைய நாட்களிலேயே சேசுசபை அருட்தந்தையர்களால்  தூய சவேரியார் பள்ளி தொடங்கப்பட்டதும்,சாராள் தக்கர் கல்லூரி,தூய யோவான் கல்லூரி,மதுரை திரவியம் தாயுமானார் இந்துக் கல்லூரி என்று நூறாண்டுகள் நூற்றைம்பதாண்டுகள் கடந்த கல்வி நிறுவனங்கள் கொண்ட மாவட்டம் நெல்லை மாவட்டம்.

அவர்களின் உருவில் அந்தப் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை அந்தோனி சாமி அடிகளார்,என் அன்பு நண்பர் டாக்டர் டோனி தம்பி ராஜா ஆகியோருடன் பொன்விழாவின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினேன்.உள்ளம் நெகிழ்வின் காரணமாய் பத்துநிமிடத்திற்கு மேல் என்னால் பேசமுடியவில்லை..

பள்ளி நினைவுகளும் பாடம் கற்றுத்தந்த அந்த எழுத்தறிவித்த இறைவன்களுக்கு முன் நான் அன்றும் மாணவனாகத்தான் இருந்தேன்.

      பள்ளித்தாளாளர் அருட்தந்தை அந்தோனிசாமி அடிகளார் ஆசியுரை
        சிறப்புவிருந்தினர் முனைவர் ச.மகாதேவன் சிறப்புரை